2
“சும்மா வேடிக்கைகுப் பேசினோம். நாளை கிழக்குக் காட்டுப் பக்கமா இவளுடைய அப்பா வேட்டைக்குப் போகிறாராம். என்னையும் அழைச்சிருக்கார். நீங்க வந்து கலந்துக்கிறதுன்னா எனக்கென்ன ஆட்சேபம்? தாராளமாக வாங்க!” என்று சலனமற்ற குரலில் கூறினான் ஜீவானந்தம்.
“ஓ! நீங்க ஆட்சேபிக்க மாட்டீங்கன்னு நான் அப்பவே யூகிச்சேன். வர்றீங்களா? நான் கிளம்பறேன். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வருவீங்க” என்று கூறித் திரும்பினான் தியாகராஜன்.
அவனுக்காக - அவனுடைய விஷம் தடவிய வார்த்தைகளின் விகல்ப அர்த்தத்துக்காக - ஜீவானந்தம் புறப்படத் தொடங்கினான்.
“சரி, நிஷா! நீ வீட்டுக்குப் போய், நான் காலையிலே வர்றதாக உங்கப்பாகிட்டே சொல்” என்று அவளை அனுப்பி வைத்தான்.
“நிஷா! ரொம்ப அழகான பேர் இல்லையா மிஸ்டர் ஜீவன்? அந்த வார்த்தை மனசிலே தூண்டில் மாதிரி விழுந்து எதையோ இழுக்கிற மாதிரி இருக்கு.”
அவனுடைய அந்தத் தைரியமான பேச்சைக் கேட்டு ஜீவானந்தம் இரண்டு கைகளையும் இறுகப் பிசைந்து கொண்டான். அவன் ‘ஜீவன்’ என்று அழைக்கும்போதெல்லாம் அவனுடைய உள்ளத்தின் மென்மையான பாகத்தில் வீற்றிருக்கும் அந்த மகத்தான துக்கம் மெதுவாக ஞாபகப்படுத்தப்படுகிறது. ‘ஜீவன்’ - ‘அவள்’ தான் அப்படி அழைப்பாள். அவள் ஒருத்திக்குத்தான் அந்தப் பெயரை அவ்வளவு உயிரோடு சுருக்கத் தெரிந்தது. இவன் யார்? ஜீவானந்தத்தின் துக்கங்களும் ரகசியங்களும் தெரிந்தவனா? தன்னோடு பழகும்போதெல்லாம் குத்தீட்டிகள் போன்று இவன் ஏன் வார்த்தைகளை உபயோகிக்கிறான்? ஜீவானந்தத்துக்கு ஒன்றும் புரியவில்லை.
“சரி! மிஸ்டர் ஜீவன், நான் இப்படியே பங்களாவுக்குப் போகிறேன். வேட்டை, நாளைக்குக் காலையில்தானே? நீங்க நாளைக்குக் காலையிலே பங்களாவுக்கு வரணும். காலையிலே ‘டிபன்’ அங்கேதான் என்ன?” என்றான் தியாகராஜன்.
‘அதை மறுத்துவிடு... மறுத்துவிடு’ என்று உள்ளத்திலிருந்து ஓர் உறுத்தல் கட்டளையிட்டது. ஆனால் ஜீவானந்தம் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டான்.
“நான் உங்களை அவசியம் எதிர்பார்ப்பேன்” என்று கட்டளையிடுவது போல் கூறிவிட்டு ஒரு குறுக்குப் பாதையில் நுழைந்தான் தியாகராஜன். ஜீவானந்தம் ஜான்ஸன் துரையின் வீட்டை நோக்கிச் செல்லலானான்.
ஜீவானந்தம் தனது துப்பாக்கியை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினான். சூரியனின் பொற்கதிர்கள் பறவைகளின் உதய நேரக் குதூகலிப்பை ஊக்குவித்தவாறு மர இலைகளினூடே, அருவி ஓலத்தின் மேலே ஜரிகை போல் நீண்டு விழுந்தன... அவன் உல்லாசமாகச் சீட்டியடித்த வண்ணம் மனித வாழ்வில் சாந்தியின் இந்த அபூர்வ தரிசனத்தை அனுபவித்துக் கொண்டே பாரஸ்ட் பங்களாவை நோக்கி நடந்தான். பங்களாவுக்கு வெளியிலேயே ஆபீஸ் உடையோடு பியூன் ஒருவன் பெரிய பலாப்பழத்தை உரிக்கிற முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அவனும் புதியவன்தான். பங்களாவுக்குச் சற்றுத் தள்ளி ஒரு பன்னீர் மரநிழலில் ஷிகாரி வெள்ளைக் குதிரைக்கு எண்ணெய் தடவி ‘மாஸேஜ்’ செய்து கொண்டிருந்தான். தொலைவிலிருந்து பார்க்கும்போது சதுரமாகச் செதுக்கி விட்டிருந்த அந்த வெட்டவெளியில் வைத்த வெள்ளைமுத்துப்போல் சமீபத்தில் பூச்சு வேலை செய்யப்பட்ட பங்களா தோன்றியது. பங்களாவை ஒட்டியே ‘சிமெண்ட் ஷீட்’னால் போர்த்தப்பட்டிருந்த ஒரு ஜீப் ஷெட் இருந்தது. ஆனால் அதில் குதிரையைக் கட்டி வைக்க விரும்பாமலோ என்னவோ, மூங்கிலாலும் மஞ்சம் புல்லினாலும் வேயப்பட்டு, குதிரைக்கென்று ஒரு தனிக்கொட்டகை மலைவாசிகள் நாலைந்து பேர்களால் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. தியாகராஜன் அதை மேற்பார்வையிட்டுக் கொண்டு நின்றிருந்தான்.
“டிய்யூ... டிய்யூ” என்று ஒரு காட்டுக்குயில் எங்கிருந்தோ கூவிற்று. குதிரை ‘மாஸேஜின்’ சுகத்தை வாலை ஆட்டியபடி மெல்லக் கனைப்பதன் மூலம் தெரிவித்தது. தியாகராஜன் பூட்ஸ் ஓசையைக் கேட்டதும் ‘டக்’கென்று திரும்பினான், ஜீவானந்தம்.
“ஹல்லோ, மிஸ்டர் ஜீவன்! பரவாயில்லையே, கரெக்டா வந்துட்டீங்களே!” என்று பேசியபடியே அவனருகில் வந்து தோள்மேல் கை வைத்து உள்ளே அழைத்துச் சென்றான்.
முன்பு பல தடவை ஜீவானந்தம் அந்தப் பங்களாவுக்கு வந்திருக்கிறான். அந்தப் பங்களா தானா இது என்ற ஐயம் அவனுக்கு இப்போது ஏற்பட்டது.
முன் ஹாலில் ‘லினோலியம்’ விரித்திருந்தது. பழைய நாற்காலி மேஜைகள் அகற்றப்பட்டு, கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட பளிச்சென்ற ஆசனங்கள். கவிஞர்களும், மகான்களும், பெரிய எழுத்தாளர்களும் இருந்த படங்களுக்குப் பதில் பாடம் செய்து மாட்டப்பட்டிருந்தன, மிருக வர்க்கங்களின் தலைகள். நேர்ச்சுவரின் நடுவில் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் இரண்டு ஒரு ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்தன. தியாகராஜனின் பக்தி நிறைந்த உபாஸனைக்கு ஆளான தெய்வங்கள் போல், பளபளவென்று அவை நன்கு மெருகேறி எதிர் ஜன்னலில் வந்து விழுந்த சூரிய கிரணத்தைப் பார்த்துச் சிரித்தன. ஈட்டியைத் தோளுக்கு மேலே ஓங்கிக் கொண்டு கண்களில் கனல் தெறிக்க, ஸ்பார்ட்டன் சிலை மார்பளவு பெரிய உருவில் நடுவில் வைக்கப்பட்டிருந்தது.
“உட்காருங்கள்” என்று ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவனுக்கு ஒரு சோபாவைச் சுட்டிக் காட்டினான் தியாகராஜன்.
“பங்களா எப்படியிருக்கிறது? முன்னே வந்து பார்த்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள்” என்றான். அவன் கண்களிலும் உதடுகளிலும் எதை ஜீவானந்தம் மனப்பூர்வமாக வெறுத்தானோ, அந்த அகம்பாவம் தென்பட்டது.
“பயங்கரமாக இருக்கிறது” என்று கச்சிதமாகப் பதிலளித்தான் ஜீவானந்தம்.
“ஓஹோ!” என்று வாய்விட்டுச் சிரித்தான் தியாகராஜன்.
அதில் சிரிப்பதற்கு என்ன இருந்ததோ என்று புரியாமல் ஜீவானந்தம் விழித்தான்.
“இருந்தாலும் நீங்க ரொம்பப் பயந்தவர், மிஸ்டர் ஜீவன்!” என்று அவனை நோக்கி ஒற்றை விரலை ஆட்டிய படியே தியாகராஜன் எழுந்தான்.
“உட்காருங்கள். இதோ, உள்ளே போயிட்டு வர்றேன். ஹும், உங்களுக்குப் புரட்டிக் கொண்டிருக்க ஏதாவது புத்தகம்” என்று மேஜை டிராயரை இழுத்து எதையோ புரட்டலானான்.
“அடேடே! உங்களிடம் புத்தகமெல்லாம் கூட இருக்கிறதா?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டான் ஜீனாவந்தம்.
“என்ன அப்படி நினைத்துவிட்டீர்கள்?” என்று ஹிட்லரைப் பற்றிய ஒரு புத்தகத்தை அவனிடம் நீட்டினான் தியாகராஜன்.
“அதுதானே கேட்டேன்!” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு ஜீவானந்தம் புத்தகத்தைப் புரட்டினான். அந்தக் கொலைக்காரப் புத்தகத்தில் அவனுக்கு மனசு செல்லவில்லை. அதை மூடி ‘டீப்பா’யின் மீது போட்டுவிட்டு அறையை ஒரு பார்வை பார்த்தான். அங்கே ரசிக்க ஒன்றும் இல்லை. ஜன்னலின் வழியே குதிரையும் ‘மாஸேஜ்’ செய்து கொண்டிருந்த ஷிகாரியும் தெரிந்தார்கள். உட்கார்ந்தவாறே அந்தச் சதுரம் வரை தடுக்கப்பட்டிருந்த வெளியுலகை நோட்டமிட்டான்.
வீட்டுக்குள்ளேயிருந்து கிணற்று ராட்டினம் கிறிச்சிடும் ஒலியும், மெல்லிய இனம் விளங்காத மதுர சங்கீதம் போல் வளையல்கள் கிலுகிலுக்கும் சப்தமும் கேட்டன. வாளி ஒன்று தரையின் மீது வைக்கப்பட்டது.
“டேய், ஜானகிராம்!” என்று அமுத்தலான குரலில் உள்ளேயிருந்து தியாகராஜன் அழைத்தான்.
“வர்றேன் சார்!” என்று பதிலளித்தபடி பலாப்பழத்தைக் கையில் ஏந்தியபடி ஆபீஸ் பியூன் உள்ளே சென்றான். அப்புறம் ஏதோ மந்தமான குரலில் யாரோ பேசினார்கள். மறுநிமிஷம் தியாகராஜன் வெளியே வந்தான்.
“எஸ் மிஸ்டர் ஜீவன்! கை கழுவிக்கலாமா? வாங்க போவோம்.”
ஜீவானந்தம் பூட்ஸ் லேஸைக் கழற்றி அவிழ்க்கத் தொடங்கினான்.
“ஓ, அந்தச் சம்பிரதாயமெல்லாம் பார்க்கிறீங்களா?”
“சம்பிரதாயம் ஒன்றுமில்லையே. கால் கழுவணுமேன்னுதான்.”
பூட்ஸையும், சாக்ஸையும் கழற்றி மேஜைக்கடியில் போட்டுவிட்டு ஜீவானந்தம் அவனோடு உள்ளே நுழைந்தான்.
சாப்பாட்டு அறையில் நுழைந்ததும்தான் இந்த வீட்டிலும் தெய்வீகம் கொஞ்சம் இருக்கிறது என்று ஜீவானந்தத்துக்கு நம்பிக்கை வந்தது. கண்ணனை இலேசான வர்ணமயக்கில், நினைவின் ஓவியம்போல் தீட்டியிருந்தது. படத்தில் மீராவும், நினைவின் நிறைந்த பாவமும்தான் புராதனமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. பக்கத்திலே பத்திரிகையிலே இருந்து கிழித்துப் படம் போட்டிருந்த ஆண்டாள் படம். இரண்டுக்கும் எதிரில் ஒரு ஸ்டாண்ட். அதன் மீது ஒரு ஊதுவத்திக் குழல். மறுபுறம், குளிர்ந்த நீலச் சுடர் வீசி நிற்கும் ஒரு பாவை விளக்கு. ஊதுவர்த்திக் குழலில் செருகியிருந்த வத்தியிலிருந்து மெல்லத் தன் வழியை நிதானித்துக் கொண்டாற்போன்ற அலை அலையான புகைச் சுருள். அதிலிருந்து கிளம்பிய இங்கிதமான வாசனை, இருதயத்தின் மீது எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தாமல் மெல்லத் தவழ்ந்து வந்து ஓர் அபூர்வ சுகத்தை அளித்தது.
ஒரு குடும்பத்தின் இந்தக் காட்சி!
ஜீவானந்தத்துக்கு மெய் சிலிர்த்தது. அதை அவன் அனுபவித்ததைக் கவனித்த தியாகராஜன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “எல்லாம் நம்ம மனைவியின் ருசி. நமக்கு இதெல்லாம் பிடிக்கிறதில்லே” என்று கூறிக் கொண்டே அவனைச் சாப்பாட்டு மேஜையருகில் அழைத்துச் சென்றான். இருவரும் அமர்ந்தனர்.
“கங்கா!” என்று தியாராஜன் கூப்பிட்டுவிட்டுப் பிறகு ஜீவானந்தத்தோடு பேச்சை ஆரம்பித்தான்.
“கங்கா!” என்று அவன் கூப்பிட்டதும் ஜீவானந்தத்துக்குத் தன்னிலை மறந்துவிட்டது. மனக் குகையில் அந்த ஒலி அலைபட்டுக் கங்கை நதியின் கம்பீர முழக்கத்தைப் போல் பலத்த எதிரொலிகளைச் சிருஷ்டித்தது. எந்தப் பெயர் அவனுடைய வாழ்க்கையில் தேவாலயத்துத் தூங்கா மணி விளக்குப் போல் துக்கத்தினூடே ஒளி வீசிக் கொண்டிருந்ததோ அந்தப் பெயர் அது. அந்தப் பெயரைத் தொடர்ந்து, நிலாமுற்றத்தின் விளிம்புக்கு மேலே மெல்ல மெல்ல எழுந்து வரும் சந்திர வட்டம்போல் அவனது நினைவின் பொறிகளில் மெதுவாக... மெதுவாகப் பாதசரங்கள் கூட அதிகம் சப்திக்காமல் அவள் வந்து கொண்டிருந்தாள். தியாகராஜன் ஜீவானந்தத்தின் மனத்துக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தை உணராமல் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு ‘மீரா’ கேரக்டர் பிடிக்கிறதா மிஸ்டர் ஜீவன்? நான் விரும்புவதில்லை. புருஷனுக்கும் மீறிய, அவனையும் தாண்டிய பக்தின்னா என்னாலே ஒத்துக்க முடியல்லே. அது நம்ம சாஸ்திர தர்மங்களுக்கு விரோதமாயிருக்கிறதாக எனக்குப்படுகிறது. ‘ஆண்டாள் பரவாயில்லே. கண்ணனுக்காகத் தவமிருந்து, அவனுடைய காதலைக் குறித்தே ஏங்கியிருந்தாள். தன்னுடைய மனசும் மேனியும் மானிடருக்கு என்று பேச்சுப் பட்டால் எவ்வளவு கொதிக்கிறதுன்னு திருமணம் செஞ்சுக்காமலே இருந்தாள். இது காதல்!”
ஒரு பக்கம் மனத்துக்குள் அந்த மகோன்னதமான அவஸ்தையை அனுபவித்துக் கொண்டு, ஜீவானந்தம் மறுபுறம் இந்த வார்த்தைகளையும் கேட்டான். அதற்காக அவன் தர்க்கிக்க விரும்பவில்லை.
அந்நேரத்தில் வாசற்படியோரத்தில் ஒரு எவர்சில்வர் தட்டை ஏந்திய இரு சிவந்த கரங்களும், சந்தன வண்ணப்பட்டுச் சேலையின் சிவப்புக் கரை முன்றானை காற்றில் அசைந்தாடுவதும் தெரிந்தன. அவள் தயக்கத்தைப் பார்த்துத் தியாராஜன் ‘உள்ளே வா!’ என்று உத்தரவிட்டான். அவள் மெதுவாக உள்ளே வந்தாள்.
ஜீவானந்தத்தின் உள்ளம் பதைத்துத் துள்ளியது. அதன் இயக்கம்? ஒரு கணம் நிசப்தமாகிப் பேரிரைச்சலோடு மீண்டும் தொடங்கிற்று. அவள் தான் ஜீவானந்தத்தின் ஜீவ யாத்திரையில் இதுகாறும் இருந்து வந்த தீபவெளிச்சம். அவனுடைய கங்காவேதான். ஒரே ராகமாக அவனுக்குள் அமர்ந்திருந்த ஜீவனின் நாதம், பற்பல கிளைகளாகப் பிரிந்தது. அவன் வெகு வருத்தத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
பழைய சாந்தம் தவழ்ந்த அதே முகம். இன்னும் அவள் அவனைப் பார்க்கவில்லை. எனவே முகத்தில் நிலவியிருந்த சகஜ பாவமே ஒரு சோகமான சோபையைக் கொடுத்தது. அவனுக்கு அப்போது தியாகராஜன் மறைந்து விட்டான். இருக்கை மறைந்தது. இடம் மறந்தது. ஓர் ஆழ்ந்த மனக் குறையை மலர்த்தட்டில் ஏந்தியவாறு தெய்வத்துக்கு நிவேதிக்க வந்த மௌன கங்கையாக அவள் மட்டும் தெரிந்தாள்.
“இவர்தான் மிஸ்டர் ஜீவானந்தம். இவள்தான் என் மனைவி” என்று தான் இருப்பதை ஸ்தாபிப்பதுபோல் தியாகராஜனின் குரல் கேட்டது.
எதைத் தாள முடியாது என்பதற்காக - எது நிகழக்கூடாது என்று ஜீவானந்தம் மனப்பூர்வமாக எதிர்பார்த்தானோ அது நேர்ந்தது. கங்கா அவனை நிமிர்ந்து பார்த்தாள். முதல் வெட்டில் மெல்லத் தள்ளாடும் வாழைபோல் கங்கா தடுமாறினாள்.
“நமஸ்காரம்” என்று தொண்டை மெல்லக் கலங்க அவளை எச்சரித்தான் ஜீவானந்தம்.
மறுகணம் கங்கா சமாளித்துக் கொண்டாள். சட்டென்று சகித்தற்கரிய அந்தப் பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டு, “நமஸ்காரம்” என்று ஒலி குறைந்த குரலில் கூறினாள் கங்கா.
“சீக்கிரமா பரிமாறு கங்கா! வேட்டைக்கு இப்பவே நேரமாயிடுச்சு” என்று கட்டளையிட்டான் தியாகராஜன். அவனுடைய முகம் இலேசாய்க் கறுத்தது.
துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜீவானந்தத்தின் மார்புக்கெதிரில், கங்காவின் கை, பலகாரத் தட்டுக்களை எடுத்து வைத்துப் பரிமாறிற்று. அவளுடைய கூந்தலிலிருந்து அவனுக்கு மறக்க முடியாத தைலத்தின் வாசனை. ஜீவானந்தம் உதட்டைக் கடித்தபடி தலையைத் தாழ்த்தவிட்டான்.
“என்ன மிஸ்டர் ஜீவன்! மீராவைப்பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?” என்று தியாராஜன் ஆரம்பித்தான்.
பளிச்சென்று மின்னல்போல் அவனுடைய வார்த்தை ஜீவானந்தத்தைத் தகித்தது. அவன் எதையோ சிலேடையாகக் குத்திக் காட்டுகிறானா? பலகாரத் தட்டிலிருந்து ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் சாக்கில் கங்காவைப் பார்த்தான். கங்கா சுவரோரமாக இடதுகையால் மணிக்கட்டைப் பிடித்த வண்ணம் நின்றிருந்தாள். உதடுகள் துடித்தன. கண்களைக் கீழே தாழ்த்திச் சூழ்நிலையிலிருந்து தன்னைச் சிறையிட்டுக் கொண்டு நின்றாள்.
“மீராவை எனக்கு மதிக்கத் தோன்றுகிறது ஸார்! அவளுடைய பக்தி ஆத்மீகமானது. அது காதலில்லை. ஆண்டாள் கண்ணனைக் காதலித்தாள். அவள் பாவம் வேறு; மீராவின் பாவம் வேறு.”
“அப்படியா! உங்களுக்கு மீரா ‘கேரக்டர்’ பிடிக்கிறதுன்னு சொல்லுங்க. என் மனைவிக்கும் அப்படித்தான் மிஸ்டர் ஜீவன்!”
ஜீவானந்தம் பதறிப்போய் அவனைத் திரும்பிப் பார்த்தான்.சாதாரண வார்த்தையொன்று சொல்லியவன்போல் தியாகராஜன் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எது வாயில் வரக்கூடாதோ அதுவே தியாகராஜன் வாயிலிருந்து வந்தது. அவன் அபிப்பிராயம் என்ன என்பது மூடுமந்திரமாகப் பெரிய புயலுக்கோ மழைக்கோ சூலுற்றிருக்கும் வானம் போல் எச்சரித்தபடியேயும் இருந்தது. அதற்கப்புறம் ஜீவானந்தம் பேசவேயில்லை. எழுந்து கை கழுவச் சென்றபோது மட்டும் தற்செயலாகக் கங்காவின் கண்கள் அவனைச் சந்தித்தன. மேனியெல்லாம் காயம்பட்டுத் தீனமாகப் பார்க்கும் பேடைப் புறாவைப்போல் அந்தச் சமயத்தில் கங்கா புறப்பட்டாள். சரேலென்று ஜீவானந்தம் அவளைக் கடந்து விட்டான்.
வெளி ஹாலுக்கு இருவரும் வந்தனர். நிஷாவின் தந்தை தேடிக் கொண்டிருப்பதாக பியூன் வந்து சொன்னான்.
“என்ன ஜீவன்! நீங்க தயார் தானே?” என்று கேட்டவாறு சுவரில் நிறுத்தியிருந்த துப்பாக்கியை மடித்துச் சரி பார்க்கலானான் தியாகராஜன்.
“ஓ, நான் தயார்!”
“அப்ப கிளம்புவோம்... ஜானகிராம்! ராஜவேலைக்கூப்பிடு” என்று பியூனுக்குத் தெரிவித்தான் தியாகராஜன்.
சிறிது நேரத்தில் ஷிகாரி ராஜவேல் அங்கு வந்து நின்றான். அவனைக் கண்டதும் தியாகராஜனின் குரலில் இருந்த அதிகார மிடுக்கு சிறிது தளர்ந்தது.
“நீ டிபன் செஞ்சாச்சாப்பா?”
“முன்னேயே ஆயிடுச்சு சார்!”
“அப்ப, புறப்பட வேண்டியதுதானே? ஜானகிராம் கிட்டே என்னென்ன தேவையோ எடுத்துக்கச் சொல்லிடு... ஜானகிராம்! ஆறு பேருக்குச் சாப்பாட்டுக்குச் சொல்லியிருக்கிறேன். ஒழுங்காகக் கட்டியெத்து ஜீப்பிலே கொண்டு போய் வை. சீக்கிரமா போ. சரி, ராஜவேல், நீ கையைக் கழுவிக்கிணு சீக்கிரம் வாப்பா” என்று இருவரையும் அனுப்பினான்.
“ஜீப் காரு அந்தப் பக்கம் போவாதுங்க!” என்று வெளியே நின்றிருந்த நிஷாவின் தந்தை ஜக்கோடன் மரியாதையுடன் தெரிவித்தான்.
“அப்படியா...? எவ்வளவு தூரம் வரையில் போகும்?”
“நாம் போக வேண்டிய இடத்துக்கு ரெண்டு மைல் இப்பாலிலேயே பாட்டை நின்னுடுதுங்க.”
“சரி! அதுவரையில் போனாப் போவுது! ஆமா, முன்னாடியே அந்த இடத்துக்குப் போயிருக்கிறீயா நீ?”
“என்ன எசமான், அப்படிக் கேட்டீங்க? போனவாட்டி போய்ப் போட்டுட்டு வந்த பரணை இன்னும் பிரிக்கிலீங்க!”
“சரி, மிஸ்டர் ஜீவன்! நாம் போய் ஜீப்பை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு வருவோம்; வாங்க!”
ஜீவானந்தம் பூட்ஸை மாட்டிக் கொண்டு எழுந்திருக்கலானான். இருவரும் வெளியே வந்தபோது ஜான்ஸன் வெளியே போய்க் கொண்டிருந்தார்.
“ஹலோ! குட்மார்னிங் ஸார்! நாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வந்து கலந்து கொண்டால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்று அவரிடம் திரும்பி வணக்கத்தைக் கூட எதிர்பாராமல் விடுவிடுவென்று சொன்னான் தியாகராஜன்.
ஜான்ஸன் புன்னகையோடு அவன் சொல்லிமுடிக்கும் வரை நின்றார். ஜீவானந்தம் ஒன்றும் கூறாமல் வெறுமனே வணங்கினான்.
“எஸ், எனக்குத் துப்பாக்கியெல்லாம் வீட்டிலே இருக்கு” என்று பதிலிறுத்தார் ஜான்ஸன்.
“ஓ, நீங்க இஷ்டப்பட்டால் என்னுடையதை என்னிடம் இரண்டு இருக்கு. உபயோகப்படுத்திக் கொள்ளலாம்” என்றான் தியாகராஜன்.
அரை மணி நேரத்தில், ஐவரைச் சுமந்து கொண்டு கிழக்கு நோக்கி ஜீப் புறப்பட்டது.
தியாகராஜன் ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். வண்டி புறப்பட்டு, காட்டுப் பாதையின் கரடுமுரடான குலுக்கலுக்கும், அதிர்ச்சிகளுக்கும் ஆளாய்ப் போய்க் கொண்டிருந்தபோது ஜீப்புக்கு எதிரில் இரண்டு கைகளையும் ஆட்டியவாறே நிஷாவின் உருவம் தூரத்திலிருந்து ஓடி வந்தது.
“ஹோய்ய்...! வண்டியை நிறுத்து! நிறுத்து!”
தியாகராஜனின் முகம் மலர்ந்தது. அவன் புன்னகையோடு வண்டியை நிறுத்தினான்.
“என்னாம்மா, நிஷா!” என்று கோபத்தோடு கேட்டான் நிஷாவின் தந்தை.
“நானும் வேட்டைக்கு வருவேன்” என்று நன்றாக நிச்சயம் பண்ணிக் கொண்டு பேசுபவள்போல, வராவிட்டால் அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்வாள் என்று எச்சரிக்கிற தொனியில் பேசினாள் நிஷா.
“வேட்டையுமாச்சு, கோட்டையுமாச்சு! போ, போ. உங்காத்தாக்கிட்டே அப்புறம் நான் பதில் சொல்ல முடியாது” என்று ஜீப்பில் இருக்கிற அத்தனை பேரையும் மறந்து கத்தினான் ஜக்கோடன்.(தொடரும்)
“சும்மா வேடிக்கைகுப் பேசினோம். நாளை கிழக்குக் காட்டுப் பக்கமா இவளுடைய அப்பா வேட்டைக்குப் போகிறாராம். என்னையும் அழைச்சிருக்கார். நீங்க வந்து கலந்துக்கிறதுன்னா எனக்கென்ன ஆட்சேபம்? தாராளமாக வாங்க!” என்று சலனமற்ற குரலில் கூறினான் ஜீவானந்தம்.
“ஓ! நீங்க ஆட்சேபிக்க மாட்டீங்கன்னு நான் அப்பவே யூகிச்சேன். வர்றீங்களா? நான் கிளம்பறேன். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வருவீங்க” என்று கூறித் திரும்பினான் தியாகராஜன்.
அவனுக்காக - அவனுடைய விஷம் தடவிய வார்த்தைகளின் விகல்ப அர்த்தத்துக்காக - ஜீவானந்தம் புறப்படத் தொடங்கினான்.
“சரி, நிஷா! நீ வீட்டுக்குப் போய், நான் காலையிலே வர்றதாக உங்கப்பாகிட்டே சொல்” என்று அவளை அனுப்பி வைத்தான்.
“நிஷா! ரொம்ப அழகான பேர் இல்லையா மிஸ்டர் ஜீவன்? அந்த வார்த்தை மனசிலே தூண்டில் மாதிரி விழுந்து எதையோ இழுக்கிற மாதிரி இருக்கு.”
அவனுடைய அந்தத் தைரியமான பேச்சைக் கேட்டு ஜீவானந்தம் இரண்டு கைகளையும் இறுகப் பிசைந்து கொண்டான். அவன் ‘ஜீவன்’ என்று அழைக்கும்போதெல்லாம் அவனுடைய உள்ளத்தின் மென்மையான பாகத்தில் வீற்றிருக்கும் அந்த மகத்தான துக்கம் மெதுவாக ஞாபகப்படுத்தப்படுகிறது. ‘ஜீவன்’ - ‘அவள்’ தான் அப்படி அழைப்பாள். அவள் ஒருத்திக்குத்தான் அந்தப் பெயரை அவ்வளவு உயிரோடு சுருக்கத் தெரிந்தது. இவன் யார்? ஜீவானந்தத்தின் துக்கங்களும் ரகசியங்களும் தெரிந்தவனா? தன்னோடு பழகும்போதெல்லாம் குத்தீட்டிகள் போன்று இவன் ஏன் வார்த்தைகளை உபயோகிக்கிறான்? ஜீவானந்தத்துக்கு ஒன்றும் புரியவில்லை.
“சரி! மிஸ்டர் ஜீவன், நான் இப்படியே பங்களாவுக்குப் போகிறேன். வேட்டை, நாளைக்குக் காலையில்தானே? நீங்க நாளைக்குக் காலையிலே பங்களாவுக்கு வரணும். காலையிலே ‘டிபன்’ அங்கேதான் என்ன?” என்றான் தியாகராஜன்.
‘அதை மறுத்துவிடு... மறுத்துவிடு’ என்று உள்ளத்திலிருந்து ஓர் உறுத்தல் கட்டளையிட்டது. ஆனால் ஜீவானந்தம் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டான்.
“நான் உங்களை அவசியம் எதிர்பார்ப்பேன்” என்று கட்டளையிடுவது போல் கூறிவிட்டு ஒரு குறுக்குப் பாதையில் நுழைந்தான் தியாகராஜன். ஜீவானந்தம் ஜான்ஸன் துரையின் வீட்டை நோக்கிச் செல்லலானான்.
ஜீவானந்தம் தனது துப்பாக்கியை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினான். சூரியனின் பொற்கதிர்கள் பறவைகளின் உதய நேரக் குதூகலிப்பை ஊக்குவித்தவாறு மர இலைகளினூடே, அருவி ஓலத்தின் மேலே ஜரிகை போல் நீண்டு விழுந்தன... அவன் உல்லாசமாகச் சீட்டியடித்த வண்ணம் மனித வாழ்வில் சாந்தியின் இந்த அபூர்வ தரிசனத்தை அனுபவித்துக் கொண்டே பாரஸ்ட் பங்களாவை நோக்கி நடந்தான். பங்களாவுக்கு வெளியிலேயே ஆபீஸ் உடையோடு பியூன் ஒருவன் பெரிய பலாப்பழத்தை உரிக்கிற முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அவனும் புதியவன்தான். பங்களாவுக்குச் சற்றுத் தள்ளி ஒரு பன்னீர் மரநிழலில் ஷிகாரி வெள்ளைக் குதிரைக்கு எண்ணெய் தடவி ‘மாஸேஜ்’ செய்து கொண்டிருந்தான். தொலைவிலிருந்து பார்க்கும்போது சதுரமாகச் செதுக்கி விட்டிருந்த அந்த வெட்டவெளியில் வைத்த வெள்ளைமுத்துப்போல் சமீபத்தில் பூச்சு வேலை செய்யப்பட்ட பங்களா தோன்றியது. பங்களாவை ஒட்டியே ‘சிமெண்ட் ஷீட்’னால் போர்த்தப்பட்டிருந்த ஒரு ஜீப் ஷெட் இருந்தது. ஆனால் அதில் குதிரையைக் கட்டி வைக்க விரும்பாமலோ என்னவோ, மூங்கிலாலும் மஞ்சம் புல்லினாலும் வேயப்பட்டு, குதிரைக்கென்று ஒரு தனிக்கொட்டகை மலைவாசிகள் நாலைந்து பேர்களால் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. தியாகராஜன் அதை மேற்பார்வையிட்டுக் கொண்டு நின்றிருந்தான்.
“டிய்யூ... டிய்யூ” என்று ஒரு காட்டுக்குயில் எங்கிருந்தோ கூவிற்று. குதிரை ‘மாஸேஜின்’ சுகத்தை வாலை ஆட்டியபடி மெல்லக் கனைப்பதன் மூலம் தெரிவித்தது. தியாகராஜன் பூட்ஸ் ஓசையைக் கேட்டதும் ‘டக்’கென்று திரும்பினான், ஜீவானந்தம்.
“ஹல்லோ, மிஸ்டர் ஜீவன்! பரவாயில்லையே, கரெக்டா வந்துட்டீங்களே!” என்று பேசியபடியே அவனருகில் வந்து தோள்மேல் கை வைத்து உள்ளே அழைத்துச் சென்றான்.
முன்பு பல தடவை ஜீவானந்தம் அந்தப் பங்களாவுக்கு வந்திருக்கிறான். அந்தப் பங்களா தானா இது என்ற ஐயம் அவனுக்கு இப்போது ஏற்பட்டது.
முன் ஹாலில் ‘லினோலியம்’ விரித்திருந்தது. பழைய நாற்காலி மேஜைகள் அகற்றப்பட்டு, கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட பளிச்சென்ற ஆசனங்கள். கவிஞர்களும், மகான்களும், பெரிய எழுத்தாளர்களும் இருந்த படங்களுக்குப் பதில் பாடம் செய்து மாட்டப்பட்டிருந்தன, மிருக வர்க்கங்களின் தலைகள். நேர்ச்சுவரின் நடுவில் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் இரண்டு ஒரு ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்தன. தியாகராஜனின் பக்தி நிறைந்த உபாஸனைக்கு ஆளான தெய்வங்கள் போல், பளபளவென்று அவை நன்கு மெருகேறி எதிர் ஜன்னலில் வந்து விழுந்த சூரிய கிரணத்தைப் பார்த்துச் சிரித்தன. ஈட்டியைத் தோளுக்கு மேலே ஓங்கிக் கொண்டு கண்களில் கனல் தெறிக்க, ஸ்பார்ட்டன் சிலை மார்பளவு பெரிய உருவில் நடுவில் வைக்கப்பட்டிருந்தது.
“உட்காருங்கள்” என்று ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவனுக்கு ஒரு சோபாவைச் சுட்டிக் காட்டினான் தியாகராஜன்.
“பங்களா எப்படியிருக்கிறது? முன்னே வந்து பார்த்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள்” என்றான். அவன் கண்களிலும் உதடுகளிலும் எதை ஜீவானந்தம் மனப்பூர்வமாக வெறுத்தானோ, அந்த அகம்பாவம் தென்பட்டது.
“பயங்கரமாக இருக்கிறது” என்று கச்சிதமாகப் பதிலளித்தான் ஜீவானந்தம்.
“ஓஹோ!” என்று வாய்விட்டுச் சிரித்தான் தியாகராஜன்.
அதில் சிரிப்பதற்கு என்ன இருந்ததோ என்று புரியாமல் ஜீவானந்தம் விழித்தான்.
“இருந்தாலும் நீங்க ரொம்பப் பயந்தவர், மிஸ்டர் ஜீவன்!” என்று அவனை நோக்கி ஒற்றை விரலை ஆட்டிய படியே தியாகராஜன் எழுந்தான்.
“உட்காருங்கள். இதோ, உள்ளே போயிட்டு வர்றேன். ஹும், உங்களுக்குப் புரட்டிக் கொண்டிருக்க ஏதாவது புத்தகம்” என்று மேஜை டிராயரை இழுத்து எதையோ புரட்டலானான்.
“அடேடே! உங்களிடம் புத்தகமெல்லாம் கூட இருக்கிறதா?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டான் ஜீனாவந்தம்.
“என்ன அப்படி நினைத்துவிட்டீர்கள்?” என்று ஹிட்லரைப் பற்றிய ஒரு புத்தகத்தை அவனிடம் நீட்டினான் தியாகராஜன்.
“அதுதானே கேட்டேன்!” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு ஜீவானந்தம் புத்தகத்தைப் புரட்டினான். அந்தக் கொலைக்காரப் புத்தகத்தில் அவனுக்கு மனசு செல்லவில்லை. அதை மூடி ‘டீப்பா’யின் மீது போட்டுவிட்டு அறையை ஒரு பார்வை பார்த்தான். அங்கே ரசிக்க ஒன்றும் இல்லை. ஜன்னலின் வழியே குதிரையும் ‘மாஸேஜ்’ செய்து கொண்டிருந்த ஷிகாரியும் தெரிந்தார்கள். உட்கார்ந்தவாறே அந்தச் சதுரம் வரை தடுக்கப்பட்டிருந்த வெளியுலகை நோட்டமிட்டான்.
வீட்டுக்குள்ளேயிருந்து கிணற்று ராட்டினம் கிறிச்சிடும் ஒலியும், மெல்லிய இனம் விளங்காத மதுர சங்கீதம் போல் வளையல்கள் கிலுகிலுக்கும் சப்தமும் கேட்டன. வாளி ஒன்று தரையின் மீது வைக்கப்பட்டது.
“டேய், ஜானகிராம்!” என்று அமுத்தலான குரலில் உள்ளேயிருந்து தியாகராஜன் அழைத்தான்.
“வர்றேன் சார்!” என்று பதிலளித்தபடி பலாப்பழத்தைக் கையில் ஏந்தியபடி ஆபீஸ் பியூன் உள்ளே சென்றான். அப்புறம் ஏதோ மந்தமான குரலில் யாரோ பேசினார்கள். மறுநிமிஷம் தியாகராஜன் வெளியே வந்தான்.
“எஸ் மிஸ்டர் ஜீவன்! கை கழுவிக்கலாமா? வாங்க போவோம்.”
ஜீவானந்தம் பூட்ஸ் லேஸைக் கழற்றி அவிழ்க்கத் தொடங்கினான்.
“ஓ, அந்தச் சம்பிரதாயமெல்லாம் பார்க்கிறீங்களா?”
“சம்பிரதாயம் ஒன்றுமில்லையே. கால் கழுவணுமேன்னுதான்.”
பூட்ஸையும், சாக்ஸையும் கழற்றி மேஜைக்கடியில் போட்டுவிட்டு ஜீவானந்தம் அவனோடு உள்ளே நுழைந்தான்.
சாப்பாட்டு அறையில் நுழைந்ததும்தான் இந்த வீட்டிலும் தெய்வீகம் கொஞ்சம் இருக்கிறது என்று ஜீவானந்தத்துக்கு நம்பிக்கை வந்தது. கண்ணனை இலேசான வர்ணமயக்கில், நினைவின் ஓவியம்போல் தீட்டியிருந்தது. படத்தில் மீராவும், நினைவின் நிறைந்த பாவமும்தான் புராதனமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. பக்கத்திலே பத்திரிகையிலே இருந்து கிழித்துப் படம் போட்டிருந்த ஆண்டாள் படம். இரண்டுக்கும் எதிரில் ஒரு ஸ்டாண்ட். அதன் மீது ஒரு ஊதுவத்திக் குழல். மறுபுறம், குளிர்ந்த நீலச் சுடர் வீசி நிற்கும் ஒரு பாவை விளக்கு. ஊதுவர்த்திக் குழலில் செருகியிருந்த வத்தியிலிருந்து மெல்லத் தன் வழியை நிதானித்துக் கொண்டாற்போன்ற அலை அலையான புகைச் சுருள். அதிலிருந்து கிளம்பிய இங்கிதமான வாசனை, இருதயத்தின் மீது எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தாமல் மெல்லத் தவழ்ந்து வந்து ஓர் அபூர்வ சுகத்தை அளித்தது.
ஒரு குடும்பத்தின் இந்தக் காட்சி!
ஜீவானந்தத்துக்கு மெய் சிலிர்த்தது. அதை அவன் அனுபவித்ததைக் கவனித்த தியாகராஜன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “எல்லாம் நம்ம மனைவியின் ருசி. நமக்கு இதெல்லாம் பிடிக்கிறதில்லே” என்று கூறிக் கொண்டே அவனைச் சாப்பாட்டு மேஜையருகில் அழைத்துச் சென்றான். இருவரும் அமர்ந்தனர்.
“கங்கா!” என்று தியாராஜன் கூப்பிட்டுவிட்டுப் பிறகு ஜீவானந்தத்தோடு பேச்சை ஆரம்பித்தான்.
“கங்கா!” என்று அவன் கூப்பிட்டதும் ஜீவானந்தத்துக்குத் தன்னிலை மறந்துவிட்டது. மனக் குகையில் அந்த ஒலி அலைபட்டுக் கங்கை நதியின் கம்பீர முழக்கத்தைப் போல் பலத்த எதிரொலிகளைச் சிருஷ்டித்தது. எந்தப் பெயர் அவனுடைய வாழ்க்கையில் தேவாலயத்துத் தூங்கா மணி விளக்குப் போல் துக்கத்தினூடே ஒளி வீசிக் கொண்டிருந்ததோ அந்தப் பெயர் அது. அந்தப் பெயரைத் தொடர்ந்து, நிலாமுற்றத்தின் விளிம்புக்கு மேலே மெல்ல மெல்ல எழுந்து வரும் சந்திர வட்டம்போல் அவனது நினைவின் பொறிகளில் மெதுவாக... மெதுவாகப் பாதசரங்கள் கூட அதிகம் சப்திக்காமல் அவள் வந்து கொண்டிருந்தாள். தியாகராஜன் ஜீவானந்தத்தின் மனத்துக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தை உணராமல் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு ‘மீரா’ கேரக்டர் பிடிக்கிறதா மிஸ்டர் ஜீவன்? நான் விரும்புவதில்லை. புருஷனுக்கும் மீறிய, அவனையும் தாண்டிய பக்தின்னா என்னாலே ஒத்துக்க முடியல்லே. அது நம்ம சாஸ்திர தர்மங்களுக்கு விரோதமாயிருக்கிறதாக எனக்குப்படுகிறது. ‘ஆண்டாள் பரவாயில்லே. கண்ணனுக்காகத் தவமிருந்து, அவனுடைய காதலைக் குறித்தே ஏங்கியிருந்தாள். தன்னுடைய மனசும் மேனியும் மானிடருக்கு என்று பேச்சுப் பட்டால் எவ்வளவு கொதிக்கிறதுன்னு திருமணம் செஞ்சுக்காமலே இருந்தாள். இது காதல்!”
ஒரு பக்கம் மனத்துக்குள் அந்த மகோன்னதமான அவஸ்தையை அனுபவித்துக் கொண்டு, ஜீவானந்தம் மறுபுறம் இந்த வார்த்தைகளையும் கேட்டான். அதற்காக அவன் தர்க்கிக்க விரும்பவில்லை.
அந்நேரத்தில் வாசற்படியோரத்தில் ஒரு எவர்சில்வர் தட்டை ஏந்திய இரு சிவந்த கரங்களும், சந்தன வண்ணப்பட்டுச் சேலையின் சிவப்புக் கரை முன்றானை காற்றில் அசைந்தாடுவதும் தெரிந்தன. அவள் தயக்கத்தைப் பார்த்துத் தியாராஜன் ‘உள்ளே வா!’ என்று உத்தரவிட்டான். அவள் மெதுவாக உள்ளே வந்தாள்.
ஜீவானந்தத்தின் உள்ளம் பதைத்துத் துள்ளியது. அதன் இயக்கம்? ஒரு கணம் நிசப்தமாகிப் பேரிரைச்சலோடு மீண்டும் தொடங்கிற்று. அவள் தான் ஜீவானந்தத்தின் ஜீவ யாத்திரையில் இதுகாறும் இருந்து வந்த தீபவெளிச்சம். அவனுடைய கங்காவேதான். ஒரே ராகமாக அவனுக்குள் அமர்ந்திருந்த ஜீவனின் நாதம், பற்பல கிளைகளாகப் பிரிந்தது. அவன் வெகு வருத்தத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
பழைய சாந்தம் தவழ்ந்த அதே முகம். இன்னும் அவள் அவனைப் பார்க்கவில்லை. எனவே முகத்தில் நிலவியிருந்த சகஜ பாவமே ஒரு சோகமான சோபையைக் கொடுத்தது. அவனுக்கு அப்போது தியாகராஜன் மறைந்து விட்டான். இருக்கை மறைந்தது. இடம் மறந்தது. ஓர் ஆழ்ந்த மனக் குறையை மலர்த்தட்டில் ஏந்தியவாறு தெய்வத்துக்கு நிவேதிக்க வந்த மௌன கங்கையாக அவள் மட்டும் தெரிந்தாள்.
“இவர்தான் மிஸ்டர் ஜீவானந்தம். இவள்தான் என் மனைவி” என்று தான் இருப்பதை ஸ்தாபிப்பதுபோல் தியாகராஜனின் குரல் கேட்டது.
எதைத் தாள முடியாது என்பதற்காக - எது நிகழக்கூடாது என்று ஜீவானந்தம் மனப்பூர்வமாக எதிர்பார்த்தானோ அது நேர்ந்தது. கங்கா அவனை நிமிர்ந்து பார்த்தாள். முதல் வெட்டில் மெல்லத் தள்ளாடும் வாழைபோல் கங்கா தடுமாறினாள்.
“நமஸ்காரம்” என்று தொண்டை மெல்லக் கலங்க அவளை எச்சரித்தான் ஜீவானந்தம்.
மறுகணம் கங்கா சமாளித்துக் கொண்டாள். சட்டென்று சகித்தற்கரிய அந்தப் பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டு, “நமஸ்காரம்” என்று ஒலி குறைந்த குரலில் கூறினாள் கங்கா.
“சீக்கிரமா பரிமாறு கங்கா! வேட்டைக்கு இப்பவே நேரமாயிடுச்சு” என்று கட்டளையிட்டான் தியாகராஜன். அவனுடைய முகம் இலேசாய்க் கறுத்தது.
துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜீவானந்தத்தின் மார்புக்கெதிரில், கங்காவின் கை, பலகாரத் தட்டுக்களை எடுத்து வைத்துப் பரிமாறிற்று. அவளுடைய கூந்தலிலிருந்து அவனுக்கு மறக்க முடியாத தைலத்தின் வாசனை. ஜீவானந்தம் உதட்டைக் கடித்தபடி தலையைத் தாழ்த்தவிட்டான்.
“என்ன மிஸ்டர் ஜீவன்! மீராவைப்பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?” என்று தியாராஜன் ஆரம்பித்தான்.
பளிச்சென்று மின்னல்போல் அவனுடைய வார்த்தை ஜீவானந்தத்தைத் தகித்தது. அவன் எதையோ சிலேடையாகக் குத்திக் காட்டுகிறானா? பலகாரத் தட்டிலிருந்து ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் சாக்கில் கங்காவைப் பார்த்தான். கங்கா சுவரோரமாக இடதுகையால் மணிக்கட்டைப் பிடித்த வண்ணம் நின்றிருந்தாள். உதடுகள் துடித்தன. கண்களைக் கீழே தாழ்த்திச் சூழ்நிலையிலிருந்து தன்னைச் சிறையிட்டுக் கொண்டு நின்றாள்.
“மீராவை எனக்கு மதிக்கத் தோன்றுகிறது ஸார்! அவளுடைய பக்தி ஆத்மீகமானது. அது காதலில்லை. ஆண்டாள் கண்ணனைக் காதலித்தாள். அவள் பாவம் வேறு; மீராவின் பாவம் வேறு.”
“அப்படியா! உங்களுக்கு மீரா ‘கேரக்டர்’ பிடிக்கிறதுன்னு சொல்லுங்க. என் மனைவிக்கும் அப்படித்தான் மிஸ்டர் ஜீவன்!”
ஜீவானந்தம் பதறிப்போய் அவனைத் திரும்பிப் பார்த்தான்.சாதாரண வார்த்தையொன்று சொல்லியவன்போல் தியாகராஜன் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எது வாயில் வரக்கூடாதோ அதுவே தியாகராஜன் வாயிலிருந்து வந்தது. அவன் அபிப்பிராயம் என்ன என்பது மூடுமந்திரமாகப் பெரிய புயலுக்கோ மழைக்கோ சூலுற்றிருக்கும் வானம் போல் எச்சரித்தபடியேயும் இருந்தது. அதற்கப்புறம் ஜீவானந்தம் பேசவேயில்லை. எழுந்து கை கழுவச் சென்றபோது மட்டும் தற்செயலாகக் கங்காவின் கண்கள் அவனைச் சந்தித்தன. மேனியெல்லாம் காயம்பட்டுத் தீனமாகப் பார்க்கும் பேடைப் புறாவைப்போல் அந்தச் சமயத்தில் கங்கா புறப்பட்டாள். சரேலென்று ஜீவானந்தம் அவளைக் கடந்து விட்டான்.
வெளி ஹாலுக்கு இருவரும் வந்தனர். நிஷாவின் தந்தை தேடிக் கொண்டிருப்பதாக பியூன் வந்து சொன்னான்.
“என்ன ஜீவன்! நீங்க தயார் தானே?” என்று கேட்டவாறு சுவரில் நிறுத்தியிருந்த துப்பாக்கியை மடித்துச் சரி பார்க்கலானான் தியாகராஜன்.
“ஓ, நான் தயார்!”
“அப்ப கிளம்புவோம்... ஜானகிராம்! ராஜவேலைக்கூப்பிடு” என்று பியூனுக்குத் தெரிவித்தான் தியாகராஜன்.
சிறிது நேரத்தில் ஷிகாரி ராஜவேல் அங்கு வந்து நின்றான். அவனைக் கண்டதும் தியாகராஜனின் குரலில் இருந்த அதிகார மிடுக்கு சிறிது தளர்ந்தது.
“நீ டிபன் செஞ்சாச்சாப்பா?”
“முன்னேயே ஆயிடுச்சு சார்!”
“அப்ப, புறப்பட வேண்டியதுதானே? ஜானகிராம் கிட்டே என்னென்ன தேவையோ எடுத்துக்கச் சொல்லிடு... ஜானகிராம்! ஆறு பேருக்குச் சாப்பாட்டுக்குச் சொல்லியிருக்கிறேன். ஒழுங்காகக் கட்டியெத்து ஜீப்பிலே கொண்டு போய் வை. சீக்கிரமா போ. சரி, ராஜவேல், நீ கையைக் கழுவிக்கிணு சீக்கிரம் வாப்பா” என்று இருவரையும் அனுப்பினான்.
“ஜீப் காரு அந்தப் பக்கம் போவாதுங்க!” என்று வெளியே நின்றிருந்த நிஷாவின் தந்தை ஜக்கோடன் மரியாதையுடன் தெரிவித்தான்.
“அப்படியா...? எவ்வளவு தூரம் வரையில் போகும்?”
“நாம் போக வேண்டிய இடத்துக்கு ரெண்டு மைல் இப்பாலிலேயே பாட்டை நின்னுடுதுங்க.”
“சரி! அதுவரையில் போனாப் போவுது! ஆமா, முன்னாடியே அந்த இடத்துக்குப் போயிருக்கிறீயா நீ?”
“என்ன எசமான், அப்படிக் கேட்டீங்க? போனவாட்டி போய்ப் போட்டுட்டு வந்த பரணை இன்னும் பிரிக்கிலீங்க!”
“சரி, மிஸ்டர் ஜீவன்! நாம் போய் ஜீப்பை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு வருவோம்; வாங்க!”
ஜீவானந்தம் பூட்ஸை மாட்டிக் கொண்டு எழுந்திருக்கலானான். இருவரும் வெளியே வந்தபோது ஜான்ஸன் வெளியே போய்க் கொண்டிருந்தார்.
“ஹலோ! குட்மார்னிங் ஸார்! நாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வந்து கலந்து கொண்டால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்று அவரிடம் திரும்பி வணக்கத்தைக் கூட எதிர்பாராமல் விடுவிடுவென்று சொன்னான் தியாகராஜன்.
ஜான்ஸன் புன்னகையோடு அவன் சொல்லிமுடிக்கும் வரை நின்றார். ஜீவானந்தம் ஒன்றும் கூறாமல் வெறுமனே வணங்கினான்.
“எஸ், எனக்குத் துப்பாக்கியெல்லாம் வீட்டிலே இருக்கு” என்று பதிலிறுத்தார் ஜான்ஸன்.
“ஓ, நீங்க இஷ்டப்பட்டால் என்னுடையதை என்னிடம் இரண்டு இருக்கு. உபயோகப்படுத்திக் கொள்ளலாம்” என்றான் தியாகராஜன்.
அரை மணி நேரத்தில், ஐவரைச் சுமந்து கொண்டு கிழக்கு நோக்கி ஜீப் புறப்பட்டது.
தியாகராஜன் ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். வண்டி புறப்பட்டு, காட்டுப் பாதையின் கரடுமுரடான குலுக்கலுக்கும், அதிர்ச்சிகளுக்கும் ஆளாய்ப் போய்க் கொண்டிருந்தபோது ஜீப்புக்கு எதிரில் இரண்டு கைகளையும் ஆட்டியவாறே நிஷாவின் உருவம் தூரத்திலிருந்து ஓடி வந்தது.
“ஹோய்ய்...! வண்டியை நிறுத்து! நிறுத்து!”
தியாகராஜனின் முகம் மலர்ந்தது. அவன் புன்னகையோடு வண்டியை நிறுத்தினான்.
“என்னாம்மா, நிஷா!” என்று கோபத்தோடு கேட்டான் நிஷாவின் தந்தை.
“நானும் வேட்டைக்கு வருவேன்” என்று நன்றாக நிச்சயம் பண்ணிக் கொண்டு பேசுபவள்போல, வராவிட்டால் அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்வாள் என்று எச்சரிக்கிற தொனியில் பேசினாள் நிஷா.
“வேட்டையுமாச்சு, கோட்டையுமாச்சு! போ, போ. உங்காத்தாக்கிட்டே அப்புறம் நான் பதில் சொல்ல முடியாது” என்று ஜீப்பில் இருக்கிற அத்தனை பேரையும் மறந்து கத்தினான் ஜக்கோடன்.(தொடரும்)
No comments:
Post a Comment